மேலும்

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானியின் சிறிலங்கா பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.

நேற்று சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகடான, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் பாதுகாப்பு  செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போது,கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் சிறிலங்காவின் மூலோபாய முக்கியத்துவத்தை  ஜப்பானிய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சம்பத் துயகொந்த, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இருந்த து எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால உறவை அனுபவித்து வரும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரிடர் மேலாண்மை, எல்லை தாண்டிய மனித கடத்தலைத் தடுத்தல் மற்றும் கடலில் அரசு சாராதவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல் போன்ற முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் நீண்டகால கூட்டாண்மைக்கு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதுடன்,  புலனாய்வுப் பகிர்வு, அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள்கள், சைபர் பாதுகாப்பு குறித்த சிறப்புப் பயிற்சி, கடல்சார் சட்டம் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு ஆகியவற்றில் ஒத்துழைக்கவும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருடன், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பன்ஷோ கொய்ச்சிரோ,  கூட்டுப் பணியாளர்களின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மாட்சுனாகா கோஜி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில் தேசிய புலனாய்வுத் தலைவர், ஆயுதப்படைகளின் தளபதிகள், பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் கடலோர காவல்படையின் பணிப்பாளர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *