சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம்
சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், விரிவடையும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம் என்று, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானியின், சிறிலங்கா பயணம் தொடர்பாக தி ஜப்பான் ரைம்ஸ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி, மற்றும் சிறிலங்கா பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடல்சார் மூலோபாய நிலையில் அமைந்துள்ள, இந்தியப் பெருங்கடல் நாடான சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவின் விரிவடையும் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே, ஜப்பானின் நோக்கமாகும்.
இந்தச் சந்திப்பின் போது, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து, நகாடானி மற்றும் ஜயசேகர ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நிச்சயமற்றதன்மை அதிகரித்து வரும் நேரத்தில், பாதுகாப்பு உள்ளிட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாடுகளின் மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் செழிப்புக்கு இன்றியமையாதது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜப்பானில் பேரிடர் மீட்பு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா படைகளை அழைப்பதற்கும், வான்வழி மீட்பு மருத்துவ திறன்களை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கிலிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு ஜப்பான் பயன்படுத்தும் கடல் பாதைகளில் சிறிலங்கா அமைந்துள்ளது.
கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜப்பானிய கடற்படை கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையமாகவும் செயற்படுகிறது.
இருப்பினும், சீன உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள துறைமுகங்களும், தற்போதைய அரச நிர்வாகம் பீஜிங்கை நோக்கி சாய்ந்திருப்பதாகக் கருதப்படுவதும், கொழும்புடன் ஈடுபாட்டுடன் வைத்திருப்பதற்கான ஜப்பானின் விருப்பத்தை கூர்மைப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த பேச்சுக்களுக்குப் பின்னர் நகாடானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.