சிறிலங்காவில் சீனாவின் இரு பாரிய முதலீட்டுத் திட்டங்களில் இழுபறி
சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாந்தோட்டையில், சினோபெக் நிறுவனத்தினால் 3.7 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், மற்றும், கொழும்பு துறைமுகத்தில் ஒரு களஞ்சிய வசதி ஆகிவற்றை அமைக்கும் திட்டங்களே இழுபறிக்குள்ளாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் செலவில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவின், எரிசக்தி நிறுவனமான சினோபெக்குடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
சிறிலங்காவின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட முன்மொழிவில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே உள்ளூர் சந்தைக்கு அனுமதிக்கப்படும் என்றும், எஞ்சியவை, ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், சீனாவின் சினோபெக் நிறுவனம், அந்த நிபந்தனையை கைவிடுமாறு சிறிலங்கா அரசிடம் கோரி வருகிறது.
முன்னதாக, சினோபெக் நிறுவனம், அம்பாந்தோட்டையில் மேலதிகமாக 200 ஏக்கர் நிலத்தையும் கேட்டிருந்தது.
ஏற்றுமதி சார்ந்த திட்டமாக இருந்தால் மட்டுமே அதிகளவு நிலத்தை வழங்க முடியும் என்று சிறிலங்கா அரச தரப்பில் கூறப்பட்டிருந்தது.
எனினும் இப்போது, சினோபெக் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அது தவிர, பாரிய பெரியளவில் வரிச் சலுகையையும் சீன நிறுவனம் கோருகிறது.
சுத்திகரிக்கப்படும் எரிபொருளை முழுமையாக உள்ளூர் சந்தையில் வழங்குவதற்கு இப்போது சினோபெக் கோருவது போலவே, முன்னர் மற்ற ஏலதாரர்களும் கோரியிருந்தனர்.
ஆனால் அந்த ஏலதாரர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். அனைவரும் கைவிட்ட பின்னரே, சினோபெக் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், தற்போது உள்ளூர் சந்தையில் அதிக இடம் வழங்குமாறு கோருகின்ற நிலையில், இந்த விதிமுறையை மாற்ற முடியாதென சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
சினோபெக்கிற்கு உள்நாட்டு சந்தையில் தடையற்ற விநியோக அனுமதி வழங்கப்பட்டால், அவர்கள் மற்றவர்களை வெளியேற்றி, ஏகபோக நிலையை உருவாக்கக் கூடும் என்பது சிறிலங்கா அரசின் கவலைகளில் ஒன்றாகும்.
அது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும் என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் சினோபெக் நிறுவனத்திடம் கூறியுள்ளது.
அதேவேளை, அம்பாந்தோட்டையில் நீர்ப் பற்றாக்குறை குறித்தும் சினோபெக் கவலைகளை எழுப்பியுள்ளது.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில், சீனாவினால், முன்மொழியப்பட்ட களஞ்சிய மையத் திட்டத்தை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தாததால், அந்த திட்டம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.