அரச தரப்பின் எதிர்ப்பினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க மறுப்பு
தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா அரச சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவவில், 2008ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த, மைத்திரிபால சிறிசேனவை, இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மொறிஸ் எனப்படும், செல்வராஜா கிருபாகரன், தனுஷ் எனப்படும் தம்பிராஜா பிரகாஸ் ஆகியோர் கடந்த 16 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிரான வழக்கு கடந்த வாரம் கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரசியல் கைதிகள் இருவரும் தம்மை பிணையில் விடுவிக்குமாறு மன்றிடம் கோரிக்கை விடுத்தனர்.
பிரதிவாதிகளை எந்த நிபந்தனையின் அடிப்படையிலாவது பிணையில் விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணி கோரியிருந்தார்.
ஆனால், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசதரப்பு சட்டத்தரணி தம்மிக உடவத்த, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளதால், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் வழக்கு விசாரணைக்கு தடையாக இருக்கும் என்று அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மேல்நீதிமன்ற நீதிபதி சபுவிட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அனுரகுமார திசாநாயக்க வாக்குறுதி கொடுத்திருந்த போதும், அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்குக் கூட சிறிலங்கா அரச தரப்பு மறுத்து வருகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக பொதுத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி கூறியிருந்த போதும், அதன் பின்னர் எந்தவொரு அரசியல் கைதியும் விடுவிக்கப்படவில்லை.