சிறிலங்கா பிரதமருடன் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி (Gen Nakatani), இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில், அமைதி மற்றும் உறுதித்தன்மையை வலுப்படுத்துவதில், ஜப்பானின் அர்ப்பணிப்பை ஜெனரல் நகாடானி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில், சிறிலங்காவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை பதிலளிப்பு, மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பாதுகாப்புப் படைகளின் வகிபாகத்தை உருவாக்கும், சிறிலங்காவின் தொலைநோக்கு திட்டத்தை, ஹரிணி அமரசூரிய எடுத்துக் கூறியுள்ளார்.
ஐந்து முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் இரண்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.