நாசகாரியுடன் இணைந்து கொழும்பு வந்தது இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல்
இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான- ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ நல்லெண்ணப் பயணமாக இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் மைசூர்’ என்ற நாசகாரி போர்க்கப்பலின் பாதுகாப்புடன், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது, சிறிலங்கா கடற்படையினரால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி இந்திய விமானந்தாங்கி கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையின் வாத்திய அணியினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல் வரும் 23ஆம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.
இதன்போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து இந்தியக் கடற்படையினர் கூட்டுப் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளனர். அத்துடன் கலை நிகழ்வுகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்திய கப்பற்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ரவ்நீத் சிங், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வின் கட்டளை அதிகாரி கப்டன் கிருஸ்ணா சுவாமிநாதன், மற்றும் ‘ஐஎன்எஸ் மைசூர்’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் எம்.போல் சாமுவெல் ஆகியோர் சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இரண்டாம் இணைப்பு
இன்று காலை கொழும்புத் துறைமுகம் வந்த இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் மற்றும் நாசகாரிக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும், இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்திய கப்பற்படைப் பிரிவின் கட்டளை அதிகாரியும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தியக் கடற்படையின் மேற்குப் பிராந்திய கப்பற்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ரவ்நீத் சிங், ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’வின் கட்டளை அதிகாரி கப்டன் கிருஸ்ணா சுவாமிநாதன், மற்றும் ‘ஐஎன்எஸ் மைசூர்’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் எம்.போல் சாமுவெல் ஆகியோர், இந்தியத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலனுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பேச்சுக்களை நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியுடன், பாதுகாப்பு அமைச்சின் இணைப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவும் கலந்து கொண்டார்.