கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடங்கியது – நழுவினார் விக்கி?
கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நடத்தப்படும் இந்தக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் கூட்டம் தொடங்கிய போது,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதற்குச் சமூகமளிக்கவில்லை.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் இந்தக் கூட்டத்துக்கு வருகை தரவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாமல் மூடிய அறைக்குள் இந்தக் கூட்டம் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.
ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பிற்பகல் அமர்வில் முதலமைச்சர் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிந்திய செய்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் காலை அமர்வுகளில் பங்கேற்காத வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிற்பகல் 3.30 மணியளவிலேயே கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.