சந்திரிகாவின் ஆசனத்தை அபகரித்து ரணில் அருகே விக்கி அமர்ந்தது ஏன்?
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்கும் நகர்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ் மக்கள் பேரவையுடன் விக்னேஸ்வரன் தொடர்புபட்டுள்ளது, பற்றிய கவலைகள் உள்ளன. எனினும், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் நகர்வுகள் எதுவும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை” என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமக்கு எதிரான எத்தகைய நகர்வுகளையும் தடுத்து நிறுத்துவதற்காகவே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்டிருந்த இடைவெளியை அண்மையில் சீர்செய்திருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னைப் “பொய்யர்” என்று அழைத்த ரணில் விக்கிரமசிங்க, தைப்பொங்கல் நாளன்று, யாழ்ப்பாணம் வந்திருந்த போது, அவரை விக்னேஸ்வரன் வரவேற்றதுடன், முன்னாள் அதிபர் சந்திரிகாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தை அபகரித்துக் கொண்டு, ரணிலுக்கு அருகே அமர்ந்து கொண்டதாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.