மேலும்

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையே பேரவையின் கொள்கை – என்கிறார் முதலமைச்சர்

CM-NPCதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு மாகாணசபை ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில்,  தமிழ் மக்கள் பேரவையுடன் தனக்குள்ள தொடர்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்து முதலமைச்சர் உரையாற்றியிருந்தார்.

” கூட்டத்தில் மூன்று விடயங் கள் உங்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை சம்பந்தமாகச் சென்ற முறை நான் சந்திக்கும் போது அவற்றுக்கான பதில்களைத் தருவதாகக் கூறியிருந்தேன். இப்போது அவற்றுக்கான பதில்கள் தரப்படுகின்றன.

வினைத்திறனுள்ள மாகாணசபை செயல்முறை

மாகாணசபையின்  நிர்வாக அலகைப் பலப்படுத்துவதற்கான அனுபவம் வாய்ந்த இரு அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் என்னுடைய அமைச்சின் மூத்தஉபசெயலாளர் திருமதி. விஜயலட்சுமி கேதீஸ்வரனும் உள்வாங்கப்பட்டுள் ளார்.

கடந்த ஒரு மாதத்தில் பல விதங்களில் எனது அமைச்சின் வினைத்திறன் முன்னேற்றம் கண்டுள்ளது.

செயல்திறனுடைய அதிகாரிகள் இருந்தால்தான் மாகாணசபை செயல்முறையை முறையாக முன்னெடுத்துச் செல்லலாம்.

அந்த விதத்தில் என்னுடைய அமைச்சு இப்பொழுது செயற்திறனுடன் செயற்படுகிறது என்பது எனது கருத்து.  அமைச்சர்கள் தங்கள் தங்கள் அமைச்சுக்கள் பற்றி எடுத்துரைப்பார்கள்.

அத்துடன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிரதேச செயலர் பிரிவு ஒன்றினை மேற்பார்வை செய்ய உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான மக்களிடம் கேட்டறிய வேண்டிய வினாக்கொத்து ஒன்றும் தயாரிக்கப்படுகின்றது. எந்தெந்த அமைச்சர்களுடன் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதை யும் ஆராய்ந்து வருகிறோம்.

இதனை நான் தைப்பொங்கலின் முன்னதாக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முடிப்பதாக இருந்தது. எனினும் வேலைப்பளு காரணமாகத் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவிரைவில் இவை சம்பந்தமான ஆவணங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்படும்.

தங்கள் கடமைகள் சார்பாக வாகனங்களை மாகாணசபையிடமிருந்து பெற்றுக் கொள்வது பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  வாகன ஓட்டுநர், எரிபொருள் சம்பந்தமாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த ஆண்டு மாகாணசபையின் செயல்முறைகள் வினைத்திறனுடன் செயற்படும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குதல்

இப்போதும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்பட்டு வருகிறோம். தமிழ் மக்கள் பேரவையுடன் எனக்குத் தொடர்பிருந்தமையால் அதனைக் காரண ங்காட்டி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முரணான வகையில் நடந்து கொள்ளப் பார்க்கிறேன் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு.

23.11.2015இல் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினர் என்னை இணைத் தலைவராகப் பதவி ஏற்குமாறு கோரிய போது நான் சில உறுதிமொழிகளைக் கேட்டிருந்தேன். அவர்கள் 03.12.2015ஆம் திகதிய தமது கடிதத்தின் மூலம் பின்வரும் உறுதிமொழிகள் தந்திருந்தார்கள்.

  • தமிழ் மக்கள் பேரவை ஒருபோதும் அரசியல் கட்சியாக மாற்றமுறாது.
  • எந்த அரசியல் கட்சிக்கும் எதிராக இவ் அமைப்பு செயற்படமாட்டாது.
  • தமிழ் மக்கள் பேரவையின் ஒரே இலக்கு தமிழ் மக்களின் உரிமை, நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றிற்காகப் பணியாற்றுவதும்.

இவ்வாறான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னரே நான் இணைத்தலைவராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன். மேலும் இவ்வாறான அமைப்பின் குறிக்கோள்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியான இலக்கையே கொண்டிருக்கின்றன.

அரசியல் ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுடைய குறிக்கோள் 2013ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் படி பின்வருமாறு –

  1. தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசிய இனமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில் வாழ்ந்தும் வந்துள்ளனர்.
  2. புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையினராக கொண்டதுமான வடக்குக் கிழக்கு மாகாணங்களே தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
  3. தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.
  4. தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
  5. அதிகாரப்பகிர்வானது காணி, சட்ட ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.

மேற்கண்டவற்றுக்கு அப்பால் சென்று பிரிவினையை வலியுத்துவதற்கோ 13ஆவது திருத்தச்சட்டத்தை நிலைநிறுத்துவதற்கோ தமிழ் மக்கள் பேரவை உறுதிபூணவில்லை.

மேற் குறிப்பிட்ட கூட்டமைப்பின் குறிக்கோள்களை மையமாக வைத்தே கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்கள் பேரவை உள்ளடங்கலான அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்கிறோம்.

அதிகாரப்பகிர்வு யோசனைகள் விடயத்தில் வடக்கு மாகாணசபையின் பங்குபற்றுதல்

அதிகாரப் பகிர்வு பற்றிய யோசனைகளே எங்கள் எல்லோர் மனதிலும் நிறைந்து நிற்கின்றன. வட மாகாண சபை தனது கருத்துக்களைக் கூற வேண்டி வரும். எங்களிடையே பா.டெனிஸ்வரன், சிராய்வா, சயந்தன் போன்ற சட்டத்தரணிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை உள்ளடக்கி எமது யோசனைகளைத் தயாரித்து அவற்றை உரியவர்களுக்கு நாமும் அனுப்பலாம்.

நாங்கள் யாவருமே தமிழ் மக்கள் சார்பாகவே அதிகாரப்பகிர்வு யோசனைகளை முன்வைக்க முயன்று வருகிறோம். எமது யோசனைகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால் 2013ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அவை நோக்கப்பட்டு உரிய முடிவுக்கு வரலாம்.

என்னுடைய ஞாபகத்தின்படி 2013ஆம் ஆண்டின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் (சுயநிர்ணயம்) என்ற பதம் இருந்த போதிலும் 2015ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் காலத்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது இல்லை என்றே நினைக்கின்றேன்.

பின்னையதின் வரைவைத் தான் ஒரு வெள்ளிக்கிழமை எனக்கு பரிசீலிக்க அனுப்பிவைத்தார்கள். அதைப் பரிசீலிக்க முன் சனிக்கிழமை காலையில் உத்தியோகபூர்வமாக மக்கள் முன்னிலையில் அது வெளியிடப்பட்டது.

ஆகவே 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் 2015ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றிடையே எந்தளவு வித்தியாசம் இருக்கின்றது என்பது பற்றி எங்களது சட்டத்தரணிகள் குழாம் பரிசீலித் துப் பார்ப்பது நன்மை தரும் என்று எண்ணு கின்றேன்.

உங்களால் எழுப்பப்பட்ட 3 விட யங்களுக்கும் என்னுடைய பதிலை நான் தந்துவிட்டேன். வேறேதேனும் விடயங்கள் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டி இருந்தால் அவற்றை இப்பொழுது பரிசீலித்துப் பார்க்கலாம்.” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வடமாகாண சபையும் ஒரு குழு அமைத்து அதிகாரப் பகிர்வு பற்றிய யோசனைகளைப் பகிரங்கமாக முன் வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

வழிமூலம் – வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *