எந்தச் சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம் – கிரிசாந்த டி சில்வா
எந்தச் சவாலை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையில், சிறிலங்கா இராணுவம் இருப்பதாக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் புத்தாண்டை முன்னிட்டு, நடந்த நிகழ்வில், படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இராணுவத்தில் உள்ள ஒவ்வொருவரும், தமது பிரதான பொறுப்பு பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதேவேளை, தேச நிர்மாணத்துக்கு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்குத் தேவை ஏற்படும் போது, எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இராணுவம் இருக்க வேண்டும்.
இராணுவத்துக்கு ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் பற்றிய குறைபாடுகளை குறைக்கும் ஆண்டாக இந்த ஆண்டில் பணிபுரிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.