மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.
வலி.வடக்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணத்தை, யாழ். படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி, யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளித்தார்.
இதையடுத்து, காணி உரிமையாளர்கள், சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தமது படகுகளை நிறுத்தி மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
அதேவேளை, இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி அம்மன் கோவிலிலும் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அதேவேளை, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து தொழில் செய்யும் மீனவர்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், பிரதான வீதி வழியாக போக்குவரத்து செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.