கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பு அவசியம்- மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா
நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக, கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
55வது டிவிசனின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் உள்ள தளங்களுக்கு, அண்மையில் பயணம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
6வது சிங்க படைப்பிரிவு, 14வது சிறிலங்கா தேசிய காவல்படை, 7வது சிறிலங்கா இலகு காலாட்படைப் பட்டாலியன் பயிற்சிப் பள்ளி , மற்றும் 11வது கஜபா படைப்பிரிவு உள்ளிட்ட பல முக்கிய படைப் பிரிவுகயில் மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா ஆய்வு செய்தார்.
இதன்போது, பொறுப்புடன் இராணுவக் கடமைகளை ஆற்றும்போதும், பொதுமக்களின் பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும்போதும், வடக்கு மாகாணத்தின் கலாசார மரபுகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுக்கம், தொழில்முறைத் திறன் மற்றும் இராணுவ மற்றும் சிவில் பணிகளுக்கு இடையே ஒரு சமநிலையான அணுகுமுறையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒழுக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகளின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார்.
