சிறிலங்காவுடன் நீண்டகால எரிசக்தி உடன்பாட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா
சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கொழும்பில் பாத்பைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்தபோது, ரஷ்யாவிலிருந்து சிறிலங்கா எரிபொருள் விநியோகம் பெறுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதுதொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு சிறிது காலம் ஆகும். இது தற்போது மொஸ்கோவின் பரிசீலனையில் உள்ளது.
ரஷ்யாவின் வளங்கள் வரம்பற்றவை அல்ல என்பதால் நாங்கள் ஒரு நீண்ட கால உடன்பாட்டை எதிர்பார்க்கிறோம்.
ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை நீக்கியதன் மூலம் அமெரிக்கா வழங்கிய ஒரு மாத கால அவகாசத்தில் மட்டுமல்லாமல், ஒரு நீண்டகால உடன்பாட்டில் ரஷ்யாஆர்வமாக உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் அமெரிக்கா தடைகளை நீக்கியிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலால் பல நாடுகள் முன்னதாக ரஷ்யாவிடமிருந்து வாங்கத் தயக்கம் காட்டின.
இருப்பினும், எரிசக்தித் துறையில் தங்களால் பயனடைய விரும்பும் எவருக்கும் வளங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
