செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான நேற்று 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை அகழ்வுப் பணியின் போது, வித்தியாசமான நிலையில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட சுத்தப்படுத்தும் பணியின் போது, அது கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடு என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4 ஆம் நாள் இதே போன்ற நிலையில் மற்றுமொரு எலும்புக்கூடு அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 91 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 446 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 434 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

