பாடலுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்கிறது என்பிபி
தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட பாடலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நிகால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவரின் கொள்கையும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கையும் ஒன்றே என்றும், தேசியத் தலைவருக்கு வல்வெட்டித்துறையில் வெண்கலச் சிலை வைக்கப்படும் என்றும், வரலாற்று மண்டபம் நிறுவப்படும் என்றும், வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் பெயரில் துறைமுகம் அமைக்கப்படும் என்றும், வாக்குறுதிகளை அள்ளி வீசும் பாடல் ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
குறித்த பாடல் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கத்திலும், இணைக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சியைப் பிடிக்க தேசிய மக்கள் சக்தி மலினத்தனமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இதற்கும் தமது கட்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் எந்த தொடர்கும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிகால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.