மேலும்

சிறிலங்கா மீதான அமெரிக்க வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன

சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும்  நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அதிபர் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை விதித்தார்.

அதன்படி, சிறிலங்கா மீது 44 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டது.

இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கத்தால் இதை நீக்க முடியாது என்றும் பலர் கூறினர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட சிறிலங்கா அதிபர் உடனடியாக ஒரு சிறப்பு நிபுணர் குழுவை நியமித்தார்.

அந்தக் குழு, அமெரிக்காவில் உள்ள தூதரகம் ஊடாக, அமெரிக்க அதிகாரிகளுடன் பல நேரடி மற்றும் காணொளிக் கலந்துரையாடல்களை நடத்தியது.

அதன் விளைவாக, 44 சதவீத சுங்க வரி 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்னர், தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் சுங்க வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்த அமெரிக்க சுங்க வரி அமல்படுத்தப்பட்டிருந்தால், எமது பொருளாதாரத்திற்கு மரண அடியாக இருந்திருக்கும்.

அரசாங்கத்தின் நடவடிக்கையால் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 350,000-க்கும் மேற்பட்ட மக்களின் வேலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்கா 12.5 சதவீத கூடுதல் வரியை விதிக்க நடவடிக்கை எடுத்தது. இந்த வரி பல நாடுகள் மீது வரி விதிக்கப்பட்டது.

அந்தச் சூழ்நிலையில், இந்த வரியைக் குறைப்பதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தொடங்கி, ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்த உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளக் கூடிய விடயங்களுக்கு நாங்கள் ஒப்புக்கொண்ட அதே வேளையில், ஒப்புக்கொள்ள முடியாத விடயங்களுக்கு, எங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் உறுதியாகக் கூறியுள்ளோம்.

நாங்கள் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.

தற்போது 10 சதவீத சுங்க வரி மட்டுமே நடைமுறையில் உள்ளது. இது தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் பேணிவரும் நல்ல இராஜதந்திர உறவுகளுக்குக் கிடைத்த வெற்றி.

அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அரசாங்கம் சிறந்த உறவுகளைப் பேணி வருவதாகவும், ஜிஎஸ்பி வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *