இராணுவத்தின் பாதுகாப்பு ஒழுங்குகளில் மாற்றம் இல்லை
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவையின் அடிப்படையில், சிறிலங்கா இராணுவம் தற்போது மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அவசரகாலச்சட்ட விதிகள் தற்போது நடைமுறையில் இல்லாத போதும், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வழங்கப்படும் இராணுவ பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்காது.
அத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை, தேவையின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவம் வழங்குகிறது. அவசரகாலச் சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவை தொடரும்.
பொது பாதுகாப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தின் தற்போதைய பங்களிப்பை மாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
அவசரகால சட்ட விதிமுறைகள், யாரையாவது நேரடியாக கைது செய்வதற்கோ அல்லது தேடுதல் நடத்தவோ, தடுத்து வைத்திருக்கவோ தான் உதவுகின்றன.
அந்த சட்ட விதிகள் நடைமுறையில் இல்லாத நிலையில், காவல்துறையினர் இதனைச் செய்வதற்கு நாங்கள் உதவுவோம்.
இப்போது கூட, சந்தேக நபர்கள் அனைவரும் சிவில் சட்டத்தின் கீழேயே காவல்துறையினரால் கையாளப்படுகிறார்கள். எனவே அவசரகால விதிகளை நீக்குவது சிறிலங்கா இராணுவத்தின் பணிகளை பாதிக்காது, ”என்று கூறினார்.