மேலும்

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

Election Commissioners93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான நளின் அபேசேகர, பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் ஆகியோருடன் நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின் பின்னரே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

உள்ளூராட்சி சபைகளின எல்லைகள் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு மேல்முறையீட்டு நீதமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதையடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நேற்று இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடிந்த பின்னர் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதா அல்லது வர்த்தமானி அறிவிப்பு மீதான இடைக்காலத் தடையினால் பாதிக்கப்படாத உள்ளூராட்சி சபைகளுக்கு முதலில் தேர்தலை நடத்துவதா என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு,  மொத்தமுள்ள 336 உள்ளூராட்சிசபைகளில் 203 சபைகளுக்கு மாத்திரம் பொருத்தமானது. எனவே 133 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு தடையில்லை.

இதில் 40 உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் எழுத்துப்பிழைகள் உள்ளன. இந்த தவறுகளை திருத்தினால், அங்கு தேர்தல்களை நடத்த முடியும்.

Election Commissioners

ஆனால் தேர்தல்களை இனிமேலும் தாமதிக்க விரும்பவில்லை. அதனால், திட்டமிட்டபடி நாளை, எந்தச் சிக்கலும் இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

பல உறுப்பினர் தொகுதிகளைக் கொண்ட சபைகள் எதுவும், முதற்கட்டமாக தேர்தல் நடத்தும் உள்ளூராட்சி சபைகளுக்குள் இடம்பெறவில்லை.

40 உள்ளூராட்சி சபைகள் தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்பட்ட பின்னர், புதன்கிழமை அங்கும் வேட்புமனுக்கள் கோரப்படும்.

வரும் டிசம்பர் 4ஆம் நாள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடக்கவுள்ள விசாரணையில், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *