வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த ஆப்பு?
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலி-எல ஆகிய உள்ளூராட்சி சபைகளின் வாக்காளர்கள் ஆறு பேர், உள்ளூராட்சி சபைகளின் எல்லைநிர்ணயம் செய்யப்பட்டமைக்கு எதிராக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை இன்று விசாரணை செய்த மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழாம், இந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் நாள் வரை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.
வரும் 27ஆம் நாள், வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனால் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவது பிற்போடப்படும் சூழல் எழுந்துள்ளது.