தென்கொரியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் தென்கொரியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தென்கொரியா- சிறிலங்கா இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
எதிர்வரும் 29ஆம் நாள் சிறிலங்கா அதிபரை சந்தித்துப் பேச்சு நடத்தும் தென்கொரிய அதிபர் மூன், அன்றிரவு சிறிலங்கா அதிபருக்கு அரசுமுறை விருந்துபசாரத்தை அளிப்பார்.
இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.