மேலும்

“நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்“ – சம்பவத்தை விபரிக்கிறார் நீதிபதி இளஞ்செழியன்

judge-ilancheliyan(1)தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று தெரிவித்துள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுமாலை நடந்த தாக்குதல் தொடர்பாக விபரித்துள்ளார்.

” மாலை 5.10 மணிக்கு நான் நல்லூர் பின் வீதிக்கு வரும்போது, போக்குவரத்துக்காக எனது கார் நிறுத்தப்பட்டது.  அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த எனது மெய்ப்பாதுகாவலர், வாகனங்களை நிறுத்தி எனது வாகனத்தை செல்ல ஒழுங்கு செய்யும்போது, எனது வாகனம் நல்லூர் வாசல் நோக்கி திரும்பியது.

அப்போது வாகனங்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை  ஒருவர் எடுப்பதை நான் கண்டேன். அப்போது துப்பாக்கியை மெய்ப்பாதுகாவலர் பறிக்க முற்பட்டார்.

இருவரும் இழுபட்டு கொண்டிருந்த போது ‘துப்பாக்கியை விடுடா’ என கத்திக்கொண்டு நான் அவர்களை நோக்கி ஓடினேன்.

அப்போது, எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து, என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பி துப்பாக்கிதாரி  சுட முயன்றார். எனது மற்றைய மெய்க்காவலரான  காவல்துறை அதிகாரி ஓடி வந்து என்னை காரினுள் தள்ளி ஏற்றினார்.

judge-ilancheliyan (2)

என்னை காரினுள் ஏற்றி விட்டு அவர் துப்பாக்கிதாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில், தோட்டாக்கள் ஆலய பின் பகுதியில் இருந்த வேலித் தகரங்களை துளைத்துச் சென்றன.

துப்பாக்கிதாரி, மீண்டும் என்னை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அப்போது, மற்றைய காவலருக்கும் தோள்பட்டையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது.

எனது பாதுகாப்பு அதிகாரி, துப்பாக்கிதாரி மீது மூன்று நான்கு  சூட்டினை நத்தி இருந்தார். அதில் துப்பாக்கிதாரிக்கு காயம் ஏற்பட்டதா என்று அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் நொண்டி நொண்டி ஓடியதை அவதானித்தேன்.

அதனைத் தொடர்ந்து காயத்துக்கு உள்ளான, எனது இரு மெய்பாதுகாவலர்களையும் எனது காரில் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா மருத்துவமனைக்குச் சென்றேன்.

இது தொடர்பில், பிரதி காவல்துறை மா அதிபருக்கும் தலைமை காவல்துறை  பொறுப்பதிகாரிக்கும் அறிவித்து குறித்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காணொளி பதிவு கருவிகளை பரிசோதித்து துப்பாக்கிதாரியை கைது செய்யும் நடவடிக்கையை துரிதகதியில் முன்னெடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளேன்.

“நாம் வீதியால் வந்து கொண்டிருந்த போது, நல்லூர் பின் வீதி சந்திக்கு அருகில் இளைஞன் ஒருவர் நின்றார்.   அவர், வர்ண பூச்சு வேலைக்கு சென்று வந்தவர் போல, ஆடையில் வர்ணக் கறைகள் காணப்பட்டன. அந்த இளைஞன் மீதே ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

nallur-witnessஅவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்து கொண்டிருந்தது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும், வாகனத்தை நிறுத்தினோம்.

அதன்பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு  அதிகாரியும்  துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றோம். அப்போது துப்பாக்கிதாரி எம்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  அப்போது நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அதனையடுத்து, துப்பாக்கிதாரி வயோதிப தம்பதிகள் வந்துகொண்டிருந்த ஸ்கூட்டி ரக  உந்துருளியை பறித்து கொண்டு தப்பிச்செல்ல முயன்றவேளை, அது கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதியது.

அப்போது துப்பாக்கிதாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்தது. அதை கைவிட்டு துப்பாக்கிதாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்” – சம்பவத்தை நேரில் பார்த்தவர்

நான் வழமையாக கோவில் வீதியால் தான் சென்று வருவேன். அதனை அவதானித்து, என்னை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதா எனும் சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

அண்மைக் காலமாக, யாழ். மேல் நீதிமன்றில் நடைபெறும் பாரதூரமான வழக்குகளை கையாளும் நபராக இருப்பதனால், இந்தத் துப்பாக்கிச் சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

ஏனெனில், அந்தத் துப்பாக்கியை அவர் கையாண்ட விதம், ஒரு அனுபவம் உள்ள நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை பார்த்தபோதும் அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கிச் சூட்டாளர் போன்றே தோன்றியது.

வீதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் எனது மெய் பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

judge-ilancheliyan(1)

மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை, நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில், அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான். அத்துடன் எனது மெய்ப்பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது.

ஆகவே, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்” எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *