கூட்டமைப்பைச் சந்திப்பது மகிழ்ச்சி – அஸ்கிரிய பீட பதிவாளர்
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க எடுத்துள்ள முடிவைப் பாராட்டுவதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரும், அஸ்கிரிய சங்க சபாவின் மூத்த குழு உறுப்பினருமான வண. மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
‘எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளது மகிழ்ச்சி. ஏதாவது தவறான புரிதல்கள் இருந்தால், இதன் மூலம் அவற்றைக் களைய முடியும்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான எமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
அமைதி, நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டியது இலங்கையர்கள் என்ற வகையில், எமது பொறுப்பு.
சில விடயங்களில் வடக்கு மாகாண முதலமைச்சரின் தீவிரமான நிலைப்பாடுகளையிட்டு நாம் கவலையடைந்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.