மேலும்

11 தமிழர்கள் கடத்தல் – சிறிலங்கா கடற்படை அதிகாரியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

sl-navy2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைக் கைது செய்யுமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப்பிரிவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த சந்தேக நபரான லெப்.கொமாண்டரைக் கைது செய்வதற்கு ஏன் நீண்ட காலம் எடுக்கிறது என்று நீதிவான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேவேளை, கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கப்டன் டி.எம்.கே.பி தசநாயக்கவை இந்த வழக்கில் ஒரு சந்தேகநபராக பெயரிடவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கப்டன் டி.எம்.கே.பி தசநாயக்க சார்பில் முன்னிலையான சட்டவாளர், தமது கட்சிக்காரர், அடுத்த பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு வெளிநாட்டுப் பயிற்சிக்குச் செல்லவுள்ளார் என்றும், அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை இன்று எழுத்து மூலம் முன்வைக்குமாறும், இன்று அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்றும் நீதிவான் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சிறிலங்கா கடற்படையினரையும் ஜூலை 19ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *