சிறிலங்கா மரைன் படையினருடன் இராணுவ கொமாண்டோக்கள் சிறப்பு போர்ப் பயிற்சி
சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைப்பிரிவுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையின் மரைன் கொமாண்டோக்கள் சிறப்புப் போர் ஒத்திகை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.
அண்மையில் சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் பற்றாலியனைச் சேர்ந்த, 100 கொமாண்டோக்களும், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 30 கொமாண்டோக்கள் மற்றும் 30 சிறப்புப் படைப்பிரிவினரும், இந்தப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதலைப் பயிற்சி (Alligator Exercise) என்ற பெயரில், மட்டக்களப்பு- வாகரை கடற்கரைப் பகுதியில் நேற்று இந்த சிறப்புப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடல் மற்றும் தரைவழியாக ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தக்க வகையில், தயார் நிலையில் இருப்பதை உறுதி நோக்கில், தரையிறக்க நடவடிக்கையுடன் கூடிய இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையின் ரணவிஜய என்ற போர்க்கப்பல், 821 இலக்க தரையிறங்கு கலம், 4 கரையோர ரோந்துப் படகுகள் என்பன ஈடுபடுத்தப்பட்டன.
இந்தப் போர்ப் பயிற்சியை, கிழக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, 22 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர மற்றும் கடற்படை தரை நடவடிக்கை பணிப்பாளர் கொமடோர் செரசிங்க ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.