கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டமா?
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, எந்த தகவலும், தமக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தி, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது மோதி- தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சிறிலங்காவுக்கு எச்சரித்திருப்பதாகவும், இந்தச் சதி தொடர்பாக விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்திருப்பதாகவும், செய்திகள் தெரிவித்திருந்தன.
எனினும், இந்தச் சதித் திட்டம் தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். எனினும் புலனாய்வுப் பிரிவுக்கு இதுபற்றிய தகவல் கிடைத்திருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை தாம் அறிந்ததாகவும், ஆனால் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்றும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இரத்மலானை விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.