மேலும்

விரைவான, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைகளை வலியுறுத்துகிறது ஐ.நா

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சிறைச்சாலை வன்முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா ஷம்டசானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்காவின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த கொடிய வன்முறையும், பிற சிறைச்சாலைகளில் காவலர்களால் கைதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளும் மிகுந்த கவலையளிக்கின்றன.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் என பலரது குடும்பத்தினர் உண்மையை அறியவும், பொறுப்புக்கூறலைக் காணவும் தகுதியுடையவர்கள்.

இந்த வன்முறையானது, சிறிலங்காவில் தடுப்புக்காவல் தொடர்பான கட்டமைப்பு சார்ந்த கவலைகளை, குறிப்பாக நீண்டகால விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல், நெரிசல் மற்றும் தடுப்புக்காவல் வசதிகளில் நிலவும் போதுமான வசதியற்ற சூழல்கள் போன்றவற்றைச் சரிசெய்வதன் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும்,  அதிகளவான மக்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் பலர் சிறைவாசத்திற்குப் பதிலாக, சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளால் பயனடைய வேண்டும்.

இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழியை நாங்கள் வரவேற்கிறோம்; இந்த விசாரணைகள் விரைவானதாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் கைதிகள் மாற்றப்பட்டு சித்திரவதை மற்றும் பிற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் தடுப்புக்காவல் வசதிகள் உட்பட மற்ற அனைத்து சிறைச்சாலைகளுக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தடையின்றிச் செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும், அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *