மேலும்

அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்க புதிய திட்டம்

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின்  ஓய்வுபெறும் காலத்தை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில், அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் காலத்தை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முன்னர் முன்மொழியப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கூடுதலாக, நீதிவான் நீதிமன்ற, மாவட்ட நிதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையையும் நீடிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு,   அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும் போதும் உரிய சட்டங்களைத் திருத்துவதன் மூலம்  மற்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின்  ஓய்வுபெறும்  வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு நீதித்துறை சேவைச் சங்கம் நேற்று ஒருமனதாக எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதித்துறை சேவைச் சங்கத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்த தங்கள் கருத்தை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவிக்குமாறு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

இந்தக கூட்டத்தில் கலந்து கொண்ட 65 உறுப்பினர்களும் அந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

225க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அழைக்கப்பட்ட போதிலும், கூட்டத்திற்கு 65 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

நீதிபதிகள் சங்கக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக, கோட்டை நீதிபதியும் அதன் தலைவருமான பசன் அமரசேன  பதவியில் இருந்து விலகியிருந்தார்.

இதையடுத்து,  பிரதித் தலைவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார் என்று  நீதிபதிகள் சங்கத்தின் அறிக்கை தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *