சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் யோசித ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப்.யோசித ராஜபக்ச இன்று பிற்பகல் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருமாறு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால், யோசித ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில், கடற்படைத் தலைமையகத்தில் லெப். யோசித ராஜபக்சவிடம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதையடுத்து, லெப்.யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.
முன்னதாக, இன்று காலை சிஎஸ்என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.