மேலும்

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கும் சிறிலங்கா இராணுவம்

Sri_Lanka_Army_Flagஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்குத் தேவையான தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஹோமகம நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு கிரித்தல இராணுவ முகாமுக்குச் சென்ற போது, தேவையான தகவல்களையோ இந்த விசாரணைகளுடன் தொடர்புடையது என்று கூறப்படும்  ஒலிநாடாவையோ இராணுவத்தினர் வழங்கவில்லை.

ஒலிநாடா இருந்தால் அதனை வைத்து எக்னெலிகொடவை ஏன் கைது செய்யவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரகீத் எக்னெலிகொட வழக்கிற்குத் தேவையான ஆவணங்களையும் தகவல்களையும் வழங்க மறுத்தால் சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரமுடியும் என்று ஹோமகம நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இதையடுத்து, கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமின் ஒரு பகுதி, சீல் வைத்து மூடப்பட்டு. அந்த முகாம் இராணுவக் காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *