கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியாவின் இரண்டு நிபந்தனைகள்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இராணுவ மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கருதி இந்தியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனினும், சீனாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கும் என்பதால், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா இருக்கிறது. இதனை சிறிலங்கா அதிகாரிகள் இந்தியாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த திட்டத்தை தொடர அனுமதிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால், இரண்டு நிபந்தனைகளை இந்தியா விதித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனாவுக்கு நில உரிமை வழங்கப்படக் கூடாது, கொழும்புக்கு அருகே சீன நீர்மூழ்கிகளை நடமாட அனுமதிக்கக் கூடாது ஆகிய இரண்டு நிபந்தனைகளையுமே இந்தியா விதித்துள்ளது.