நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
பண்டாரவளை நகரில் உள்ள வட்டச்சந்திக்கு அருகே, 2019 பெப்ரவரி 10 ஆம் நாள் நடந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் இரண்டு பேரை குற்றவாளிகள் எனக் கண்டறிந்த நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பயணித்த வாகனம், காவல்துறை வாகனத்தை முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அவர்கள் மீது சட்டவிரோதமாக தடுத்தது, தாக்குதல் நடத்தி, காயங்களை ஏற்படுத்தியது மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமிந்த விஜேசிறி மற்றும் அவரது ஓட்டுநர் பந்துல ரத்நாயக்க ஆகியோர் 04 குற்றச்சாட்டுகளிலும், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவு (MSD) அதிகாரியான காவலர் ரசிக கருணாதிலக்க 03 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் என பதுளை மேல்நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி முன்னதாகத் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஓட்டுநர் பந்துல ரத்நாயக்க ஏற்கனவே மரணமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
