விமானந்தாங்கி கப்பலை கொழும்புக்கு அனுப்பியது ஏன்? – இந்திய கடற்படை விளக்கம்
சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்களே இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, தூண்டுதலாக அமைந்தது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் கருத்து வெளியிட்ட இந்திய கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி.கே.சர்மா,
“விசாகப்பட்டினத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடக்கவுள்ள கப்பல்களின் பயிற்சியில் பங்கேற்பதற்காக செல்லும் வழியிலேயே ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா கொழும்புத் துறைமுகம் சென்றது.
சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்கள் தான், ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தும் முடிவை எடுப்பதற்கு தூண்டுதலாக இருந்தது.
இந்தியாவின் இன்னொரு விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டும், விசாகப்பட்டினத்துக்குப் பயணம் மேற்கொண்ட போதும், அது கொழும்பில் நிறுத்தப்படவில்லை.
இந்தியாவும் சிறிலங்காவும் வரலாற்று ரீதியாக மிகவும் இயல்பான பல பரிமாண உறவுகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய- சிறிலங்கா கடற்படைகளும் கூட, ஆழமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன” என்றும் அவர் தெரிவிததுள்ளார்.
இப்படி அடிக்கடி வந்து போங்க அப்பதான் அண்ணனும் இருக்கிறான் என்ற பயம் வரும்.