மேலும்

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை – செவ்வாயன்று வாக்கெடுப்பு

maithri-parliamentநாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமாகிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையைச் சமர்ப்பித்தார். இதையடுத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.

அப்போது கடும்போக்காளர்கள் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக மக்களைக்கு குழப்பும் கதைகளைப் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

புதிய அரசியலமைப்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும், இதற்கு எந்த நாட்டினது ஆலோசனையும் பெறப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்ற சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில்  திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் வாக்கெடுப்பு நடத்தி அதனை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரைவில் கூட்டு எதிரணி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் திருத்தங்களை முன்வைத்துள்ளன.

திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *