சீனாவின் முதலீடுகளின் எதிர்காலம் குறித்து கொழும்பில் உயர்மட்டப் பேச்சு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இன்று உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் பணிப்பாளர் யங் வெய்கன் தலைமையிலான சீன உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவுக்கும், சிறிலங்காவின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கொழும்பில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் சீனாவின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாகவும், பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானம் உள்ளிட்டவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, பிரதி அமைச்சர் நிரோசன் பெரெரா எடுத்துக் கூறுவார்.
அதேவேளை, சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை வலுவாக இருப்பதாகவும், எல்லா நாடுகளுடனும் சமமான இருப்பதாகவும், சீன பிரதிநிதிகள் குழுவின் பயணம் அதனை நிரூபிப்பதாக உள்ளது என்றும், பிரதி அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.