சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்
சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் தமிழ்க் கைதிகள் மீது படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.
நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், இந்த அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று பதிலளித்தார்.
அதேவேளை, பொதுவாக சித்திரவதைகளுக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டை ஐ.நா கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.