மேலும்

மகிந்தவை பிரதமராக்க இணங்கும் அவசர உடன்பாடு – மைத்திரிக்கு பதிலடி

susil-premajayanthaவரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவைப் பிரதமரான நியமிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்றும், சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அந்தப் பதவி வழங்கப்படும் என்றும்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதையடுத்தே, மகிந்த ஆதரவாளர்கள், சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடம், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக கையெழுத்துக்களைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள சுசில் பிரேமஜெயந்த, நிமால் சிறிபால டி சில்வா, அனுரபிரியதர்சன யாப்பா மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்தில் பெயரிடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த யோசனைக்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *