வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் தொடர்பான செயற்பாட்டு வழிமுறைகள் வரைவு தயார்
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வரைவு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்ன்னர், சட்டரீதியான ஆய்வுக்காக சட்ட வரைவாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுமார் ஓராண்டு கால விவாதங்களுக்குப் பின்னர் அமைச்சுக்களுக்கு இடையிலான குழு ஒன்று இந்த நிலையான செயற்பாட்டு வழிமுறைகளைத் தயாரித்துள்ளது.
இந்தக் குழுவில் கடற்படை, விமானப்படை, விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து ஆணையங்கள், துறைமுகங்கள், காவல்துறை, புலனாய்வுத்துறை அமைப்புகள், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.
புதிய வரைவை இறுதி செய்வதற்கு முன்னர், மற்ற நாடுகள் பயன்படுத்தும் நிலையான செயற்பாட்டு வழிமுறைகளையும் இந்தக் குழு ஆய்வு செய்தது.
அரசாங்கம் அமைக்கப்பட்ட உடனேயே ஒரு புதிய குழுவை நியமித்து, முந்தைய வரைவிற்குப் பதிலாக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளின் திருத்தப்பட்ட வரைவைத் தயாரித்தது.
இந்தப் புதிய வரைவில் பல கூடுதல் விதிகள் மற்றும் முக்கிய மாற்றங்கள் அடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
