மேலும்

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்- உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

“2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” அல்லது அதன் எந்தவொரு விதியும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த பின்னரே, உயர்நீதிமன்றம் இந்தத் விளக்கத்தை அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் பி. பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

சமகாலத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு நவீன வடிவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்தச் சட்டமூலத்தின் 16(3) ஆவது பிரிவு அவசியமானது என்றும், உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகச் சேர்க்கப்படும் நிதிகள் மற்றும் சொத்துக்களைத் தடுப்பதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, இந்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லை என உயர்நீதிமன்றம் தனது 22 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு சபாநாயகரால் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *