மீண்டும் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை அமைதிக்காலத்தில், பரப்புரையில் ஈடுபடுடாறு கூறியதன் மூலம், அவர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என்றும், இந்த குற்றச்சாட்டுக் குறித்து விசாரிக்குமாறும், பவ்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவுக்கு, பவ்ரல், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மே 3, ஆம் திகதி முதல் கடைப்பிடிக்கப்படும் பரப்புரை ஓய்வுக் காலத்திலும் கூட, பரப்புரைகளில் ஈடுபடுமாறு தமது கட்சியின் ஆதரவாளர்களை அவர் ஊக்குவித்திருப்பதை, தாங்கள் கண்காணித்திருப்பதாகவும், பவ்ரல் அமைப்பு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமரின் இந்தக் கருத்து, அவரது ஆதரவாளர்களை தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயல் என்பதுடன், அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார், என்றும், பவ்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் பரப்புரையில் ஈடுபட்டு, தேர்தல் விதிமுறைகளில் ஈடுபட்டதாக ஏற்கனவே சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக, தேர்தல்கள் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தது.