தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் – சிறிலங்கா -ரஷ்ய படை அதிகாரிகள் பேச்சு
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தீவிரவாத முறியடிப்புப் பயிற்சிகள் தொடர்பான,பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஐவர், சிறிலங்கா இராணுவத் தலைமையத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த திட்டமிடல் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரி ஏ.எச்.எல்.ஜி .அமரபால தலைமையிலான இராணுவ அதிகாரிகள் ரஷ்ய தரப்புடன் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
இதன்போது, தீவிரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான தந்திரோபாய நிபுணத்துவம், செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஆழமான கலந்துரையாடல்களில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பை ஊக்குவித்தல், திறனை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர புரிதலை ஆழப்படுத்துதல் ஆகியவற்றில் இரு தரப்பும் தமது உறுதிப்பாட்டைப் வெளிப்படுத்தியுள்ளனர்.