சிறிலங்காவில் மருந்து உற்பத்தியில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு
அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியுள்ளது.
அண்மையில் கொழும்புக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங்கை சந்தித்த, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் இதுதொடர்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாட்டில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கி உதவுமாறு சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சிறிலங்காவில் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது, தேவையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலையும், சீனத் தூதுவரிடம், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கையளித்துள்ளார்.
சீன முதலீட்டாளர்கள் மருந்து உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சீன அரசாங்கத்துக்குத் தெரிவிக்கப்படும் என்றும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடி, மருந்துப் பொருட்களை வழங்குவது குறித்து சாதகமான பதிலைத் தருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.