ஜேவிபி மேதின பேரணியில் இந்திய, சீன பிரதிநிதிகள்- சமநிலைப்படுத்த முயற்சி
கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் பேரணியில் உரையாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி பெங் சியூபின் உரையாற்றிய போது, தமது கட்சி சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் ஜேவிபியுடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
சீன – சிறிலங்கா உறவுகளை இன்னும் வலுப்படுத்துவோம்” என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.சிந்து, தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில் உரையாற்றிய போது, ஜே.வி.பி.யின் விரைவான ஆட்சி எழுச்சியிலிருந்து தாங்கள் உத்வேகம் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
கேரளா சிறிலங்காவின் வழியைப் பின்பற்றும் என்றும், கேரளா மட்டுமல்ல – முழு இந்தியாவும் சிறிலங்காவின் வழியைப் பின்பற்றும் என்றும், ஏ.ஆர்.சிந்து தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏஎவ்பி செய்தி நிறுவனம், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இரண்டு பிராந்திய வல்லரசுகளுடனான உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார் என்று கூறியுள்ளது.