போராட்டம் நடத்தியவர்களின் பின்னால் யார் உள்ளனர் என்று தெரியும்- பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமது தூதரக வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்கள், குறித்துப் பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அந்த அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமல்ல.
அவர்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே இருந்தார்கள், ஏன் அங்கே இருந்தார்கள் என்பது கூட தெரியாது.
சிறிலங்காவின் அமைதியான மற்றும் மக்களின் அன்றாட வழக்கத்தை சீர்குலைக்கும் போராட்டங்களை நடத்துவது, உட்பட எந்தவொரு நடவடிக்கையிலும் பாகிஸ்தான் பங்கேற்க விரும்பவில்லை.“ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, புதன்கிழமையும், இன்றும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக, நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
அதேவேளை, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.