மேலும்

விகாரை பிரச்சினைக்கு மாற்றுக் காணியே தீர்வு- சிறிலங்கா அரசு திட்டவட்டம்

வடக்கு, கிழக்கில், பொதுமக்களின் நிலங்களில் கட்டப்பட்டுள்ள மதத் தலங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும், வழிமுறையைக் கையாளப் போவதாக  புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போரின்போது, ​​வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலர் மோதல்களில் இருந்து தப்புவதற்காக தங்களின் நிலங்களை கைவிட்டுச் சென்றனர்.

அந்த நிலங்களில் சில இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதுடன், மதத்தலங்களை நிர்மாணிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டன.

நிலைமை இப்போது சீரடைந்து விட்டதால், அந்த நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

ஆனால், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக பௌத்த விகாரைகள் போன்ற மதத் தலங்கள் கட்டப்பட்டுள்ள இடங்களில், இது பதற்றங்களைத் தூண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ விகாரை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்த விகாரை கட்டப்பட்ட நிலம் ஒரு காலத்தில் தமிழர்கள்  குடியிருந்தவை  என்பது தெளிவாகியுள்ளது.

அங்குள்ள தமிழ் மக்களிடம் பேசும்போது, ​​அவர்கள் அருகிலுள்ள பகுதியில் குடியேறுவதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் காண விரும்பினாலும், அந்தப் பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சிக்கலாக்குகிறார்கள்.

அவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே பதற்றங்களைத் தூண்டுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சாதாரண மக்கள் நேர்மறையான அணுகுமுறையைக் காட்டியுள்ளனர்.

பலர், வேறுநோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்குப் பதிலாக, அருகிலுள்ள நிலங்களை பெற்றுக் கொள்வது போன்ற தீர்வுகளுக்குத் தயாராக இருக்கிறார்கள்.

அத்தகைய விருப்பங்களை ஆராய்ந்து அதற்கேற்ப பிரச்சினையை நிவர்த்தி செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *