ஜேவிபியுடன் உறவுகளை வலுப்படுத்தும் சீனா – உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று கொழும்பில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
பீஜிங்கிற்கும் சிறிலங்காவில் வளர்ந்து வரும் இடதுசாரி கூட்டணிக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், டில்வின் சில்வாவுடனான சந்திப்பில் பங்கேற்றனர்.
அவர்கள், அண்மைய தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்தை, சிறிலங்காவின் அரசியல் கலாசாரத்தில் “புத்துணர்ச்சியூட்டும் மாற்றம்” என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்தும், சீனாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இன்னும் பரந்த அளவில் வலுப்படுத்து குறித்தும், இந்த கலந்துரையாடலின் போது முக்கிய கவனம், செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஜேவிபியின் தரப்பில், அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க, சுனில் குமார கமகே, ஜேவிபி மத்தியக் குழுவின் மூத்த உறுப்பினர் ஜனக அதிகாரி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
சீனத் தரப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரப் பணியகத்தின் பணிப்பாளர், பெங் சியுபின், பிரதிப் பணிப்பாளர் சென் சுவான்போ, மற்றும், அதிகாரிகளான சென் யோங்பேய் மற்றும் ஷாங் குயு, தென்மேற்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சியாவோ யாசெங், மற்றும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஜின் என்ஸே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சிறிலங்காவின் புதிய இடதுசாரித் தலைமைக்கும் இடையே வளர்ந்து வரும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தும் மே தினக் கொண்டாட்டங்களிலும் இந்தக் குழு கலந்து கொண்டுள்ளது.