வாக்குறுதியை நிறைவேற்றாத சிறிலங்கா – ஐரோப்பிய ஒன்றியம் கவலை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாதமை குறித்து, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளது.
இந்தநிலையில் சிறிலங்கா அரசாங்கம் இணங்கிக் கொண்டபடி, நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என ஆராய வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு நேற்று சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவையும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியது.
இதன்போதே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காதமை குறித்து ஐரோப்பிய ஒன்றிய குழு கவலை வெளியிட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியக் குழு விசாரித்துள்ளது.
இந்தநிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.