தேர்தல் முடிந்ததும் மின்கட்டண அதிகரிப்பு- ஐஎம்எவ் இற்கு வாக்குறுதி
ஜூன் மாதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம், உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் படி, மின்சார கட்டணங்கள், காலாண்டுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும்.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் மின்சார கட்டணத் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜனவரி மாதம் மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. விலை நிர்ணய சூத்திரத்துடன் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏப்ரலில் மின்கட்டண திருத்தம் செய்யப்படவில்லை.
இந்த நிலையிலேயே ஜூன் மாதம் கட்டண திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.