கோத்தாவை மாற்றமாட்டோம் – மகிந்த
வரும் அதிபர் தேர்தலிலுக்கான வேட்பாளர் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் மாற்றம் செய்யப்படமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”வரும் அதிபர் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்சவே போட்டியிடுவார். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேட்பாளர் மாற்றம் இருக்காது.
நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம். நன்றாக ஆலோசித்தே, கோத்தாபய ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக அறிவித்தோம். அந்த முடிவில் மாற்றம் இருக்காது.
பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் இணைந்து ஒரு கட்சியை உருவாக்குவது பற்றி பேசவில்லை. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இணைந்து செயற்படுவது குறித்தே பேசப்படுகிறது. இந்தப் பேச்சுக்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
கோத்தாபய ராஜபக்சவைக் கண்டு அரசாங்கம் பயப்படுகிறது. அதனால் தான் கோத்தாவைப் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புகிறது.
நாங்கள் சரியான நேரத்தில் தான் வேட்பாளரை அறிவித்துள்ளோம். எம்மை அடுத்து ஜேவிபியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் உள்ளக மோதல்களால் ஐதேக இன்னமும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தடுமாறுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.