ஒக்ரோபர் பிற்பகுதியில் தேர்தல் நாள் அறிவிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பு ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஒக்ரோபர் 15 தொடக்கம், 30ஆம் நாளுக்கு இடையில் வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அதையடுத்து சனிக்கிழமை ஒன்றில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிபர் தேர்தல் சட்டங்களின் படி, தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு வேட்புமனுக்களை பெறுவதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.
அத்துடன், வேட்புமனு பெறப்படும் கடைசி நாளில் இருந்து ஐந்து தொடக்கம் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
2018 வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி வாய்ந்த அரச பணியாளர்கள், அதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு ஏற்கனவே கோரப்பட்டுள்ளனர்.