மேலும்

விசாரணைகளுக்கு எவ்பிஐ தடங்கலை ஏற்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (எவ்பிஐ) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகளை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர நிராகரித்துள்ளார்.

படுகொலைகள் தொடர்பான மாதிரிகளை எவ்பிஐ பெற்றுள்ளதால், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இது உள்ளூர் விசாரணையாளர்கள் தமது கடமைகளை செய்வதற்கு தடையாக உள்ளது என்றும், நேற்று முன்தினம் ஒரு செய்தியாளர் மாநாட்டில், வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர, ”பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகள் மற்றும் குண்டுதாரிகளின் இரத்த மாதிரிகள் ஆகியவற்றை, நீதிமன்ற அனுமதியுடன் தான் எவ்பிஐ பெற்றிருந்தது.

விசாரணைகளுக்கு தாங்கள் உதவி வழங்குவதாகவும்,   தேவைப்பட்டால் தாங்கள், விசாரணைக்கு முன்னிலையாகத் தயாராக இருப்பதாகவும், எவ்பிஐ நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

மாதிரிகளைப் பெற்றுக் கொள்வதற்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தின் அனுமதியையும் எவ்பிஐ கோரியிருந்தது. அத்துடன், குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கும் அந்த அமைப்பு உதவி வருகிறது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *